Friday, 12 September 2014

business ideas in tamil -1

தொழில் ஆத்திசூடி நீங்களும் ஆகலாம் தொழிலதிபர்... 

தொழில் ஆத்திசூடி நீங்களும் ஆகலாம் தொழிலதிபர்...

திரைகடல் ஓடி திரவியம் தேட, 3000 வருடங்களுக்கு முன்பே பாய் மரக் கப்பல் கட்டிச் சென்று, பாரசீகத்துடனும், கிரேக்கத்துடனும் வணிகம் செய்த பெருமை கொண்டது நம் தமிழ் சமூகம்; ஆனால், இன்றோ, CTC (Cost To Company) பேக்கேஜ்’ என்கிற கார்ப்பரேட் சுவருக்குள் முடங்கி சுகமாக தூக்கம் போடுவதையே பழக்கமாக்கிக்கொண்டுவிட்டது.
பள்ளிக் குழந்தைகளையும், மாணவர்களையும் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மதிப்பெண்களை எடுத்தால் மட்டுமே அவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று போதனை செய்தும், அந்த எல்லையை நோக்கியே அவர்களை ஆண்டாண்டு காலமாக துரத்திவந்த நம் சமூகம், கடந்த இருபது வருடங்களாக கல்லூரி மாணவர்களுக்கு வேறு ஒரு வாழ்க்கையைக் கற்பித்து வருகிறது.
'ஒரு நல்ல இன்ஜினீயரிங் காலேஜில் படிப்பு, கேம்பஸ் இன்டர்வியூ, ப்ளேஸ்மென்ட் மற்றும் கை நிறைய சம்பளம் என்கிற எல்லைகளை வரையறுத்து, இந்த எல்லைகளுக்கு மேல் வாழ்க்கை என்பதே இல்லை’ என்கிற மாதிரியான ஒரு கருத்தை நம் இளம்தலைமுறை மீது திணித்து வருகிறது இன்றைய சமூகம். கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைக்காத மாணவன் 21 வயதிலேயே வாழ்க்கையில் தோற்றவனாகப் பார்க்கப்படுகிறான். ப்ளேஸ்மென்ட் பெறாத மாணவனைப் பெற்ற பெற்றோர்கள், நான்கு ஆண்டு தண்டச் செலவு செய்ததாகவே பார்க்கிறார்கள்.
தொடக்கக் கல்வி, உயர்கல்வி என்று பேசிய நிலை மாறி, படிப்புகளில் நல்ல படிப்பு, தேவை இல்லாத படிப்பு என்று பிரித்துப் பார்க்கிற நிலை வந்துவிட்டது. படிப்பு என்பது வேலை பெற; வேலை பெறுவது சம்பளம் பெற; சம்பளம் பெறுவது லோன் பெற; லோன் பெறுவது வீடு வாங்க; வீடு வாங்குவது காலம் முழுவதும் கடன் அடைக்க என்றே நம் வாழ்க்கை சுழன்றுகொண்டிருக்கிறது. கடன் கட்டவே வாழும் இந்த வாழ்க்கையையே கடனே என்றுதான் நாம் வாழ்ந்து வருகிறோம். இதற்காகத்தான் நாம் பிறந்தோமா?
இல்லை, நமக்கான வாழ்க்கையை நாமே நிர்ணயித்துக்கொள்வதன் மூலம் மகிழ்ச்சியான, மனநிறைவைத் தரும் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கத்தான் பிறந்திருக்கிறோம். அந்த மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்கான  வழிகளில் ஒன்று, தொழில் முனைவர் ஆவது. நீங்கள் வெற்றிகரமான ஒரு தொழிலதிபர் ஆவதற்கான அடிப்படையை உங்களுக்கு கற்றுத் தரத்தான் இந்த தொழில் ஆத்திசூடி.  
ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதன் மூலம் நீங்களும் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் மகிழ்ச்சி அடையலாம். ஆனால், நீங்கள் ஒரு தொழிலதிபர் ஆகிவிட்டால், நீங்கள் மட்டுமல்ல, ஆயிரக் கணக்கான குடும்பங்கள் உங்களால் மகிழ்ச்சி அடையும்.
தவிர, இந்தியா என்பது வளரும் தேசம்.  இன்னும் ஆயிரமாயிரம் தொழில்கள், லட்சக் கணக்கான தொழிலதிபர்கள் வந்தால்கூட  லாபம் பார்க்கிற அளவுக்கு மிகப் பெரிய சந்தை உள்ள நாடு. இப்படி பல பாசிட்டிவ்-ஆன   சூழல் இருக்கும்போது வேலை, மாதச் சம்பளம் என்கிற கவர்ச்சிப் போர்வைக்குள் நாம் ஏன் முடங்கிக் கிடக்கவேண்டும்?
''சார், நான் மாதச் சம்பளத்தையே நம்பியிருக்கும் சாதாரண மிடில் கிளாஸ் ரகம். நான் தொழில் செய்ய நினைப்பது சாத்தியமா?'' என்பதுதானே உங்கள் கேள்வி. கர்சன்பாய் படேலின் கதையைக் கேட்டால், உங்கள் கேள்விக்கான பதில் கிடைக்கும். நம்பிக்கை என்கிற டானிக் உடனே உங்கள்
நெஞ்சுக்குள் சுரக்க ஆரம்பிக்கும்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு... 1960-களில் இந்தியாவில் ஒரு பட்டப்படிப்பும், அரசு வேலையும்தான் சமூகத்தில் பெரும் தகுதியாகப் பார்க்கப்பட்டது. 1945-ல் குஜராத்தில் பிறந்த கர்சன்பாய் படேல், வேதியியல் பாடத்தில் பட்டப்படிப்பு படித்தார். 21-வது வயதில் குஜராத் அரசின் சுரங்கத் துறையில் வேலைக்குச் சேர்ந்தார்.
முதல் தலைமுறை பட்டதாரியான அவருக்கு அரசு வேலை கிடைத்ததால் அவர் வீட்டில் சந்தோஷம் கரைபுரண்டு ஓடியது. வேதியியல் பட்டதாரியான அவரால், அரசு சுரங்கத் துறையில் மாதாமாதம் கிடைக்கும் சம்பளத்தைப் பத்திரமாக வீட்டுக்கு  எடுத்துக் கொண்டு போவதைப் பெரும்பேறாக அவரால் நினைக்க முடியவில்லை. தனக்கு இருக்கும் வேதியியல் திறமை மழுங்கடிக்கப்படுவதாக அவர் தன் மனசுக்குள் குமைந்தார்.
தன் திறமையையும் ஆர்வத்தையும் வெளிக்காட்டும் வழிகளைத் தேடினார். தினமும் வேலை முடிந்து மாலை வீட்டுக்கு வந்தபின் ஏதாவது ஒரு தொழில் செய்ய விரும்பினார். அவரது வேதியியல் மூளை, அவரை அதிக பாஸ்பேட் கலக்காத சலவை உப்பு தயாரிக்கத் தூண்டியது. அதில் என்ன விசேஷம் என்று கேட்கிறீர்களா?
அந்த சமயத்தில், துணி துவைக்கும் பெண்களின் கைகள் பாஸ்பேட் கலந்த உப்பினால் ஓட்டையாகிப் போயிருக்கும். அதிக பாஸ்பேட் கலக்காத சலவை உப்பு, துணி துவைப்பவரின் கைகளில் அரிப்பை ஏற்படுத்தாது. இதனால் பாஸ்பேட் கலக்காத சலவை உப்பை பெண்கள் பெரிதும் விரும்புவார்கள் என்று நம்பினார் கர்சன்பாய்.  தவிர, இந்த சலவை உப்பை பயன்படுத்தினால் உடல் சோர்வடைகிற மாதிரி அடித்து துவைக்கத் தேவையில்லை.
இதையெல்லாம் சொல்லி குஜராத்தின் வீதிகளில் மாலை நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் பிரசாரம் செய்தார். தன் சலவை உப்பை பயன்படுத்தி அவரே தெருக்களில் துணிகளைத் துவைத்துக் காட்டினார். பல வீடுகளின் கதவைத் தட்டி, குடும்பத் தலைவி களிடம் தன்னுடைய தயாரிப்பின் பெருமையை எடுத்துச் சொன்னார். ஆனால், அவரது சுற்றமும் நட்பும், அரசு வேலையில் இருக்கும் ஒருவருக்கு இந்த கஷ்டம் எல்லாம் தேவையா? என்று தலையில் அடித்துக்கொண்டது. அதை பார்த்து கர்சன்பாய் படேல் கொஞ்சம்கூட அசரவில்லை.
குஜராத்தின் ஒவ்வொரு ஊரிலும் இந்த சலவை உப்பு 1970-களில் மெல்ல மெல்ல பிரபலம் அடைய ஆரம்பித்தது. அப்போது இதற்கென தனியாக எந்த பெயரும் அவர் வைக்கவில்லை. ஆனால், பிரபலமான ஒரு கம்பெனியின் பெயர்போன தயாரிப்பைவிட இவர் தந்த சலவைத் தூள் மூன்று மடங்கு விலை குறைவாக இருந்ததால், அவரால் வேகமாக விற்க முடிந்தது. பிராண்ட் பெயர் எதுவும் இல்லாமலே மக்கள் மனதிலும் இடம் பிடிக்க முடிந்தது.
தொழில் வேகமெடுத்தவுடன் அவர் தனது அரசு வேலையை விட்டார். அப்போது அவருக்கு 35 வயதுதான். 1980-ல் தனது மகள் நிருபமா பெயரால், நிர்மா என்ற கம்பெனியைத் தொடங்கினார். தன் சலவை தூளுக்கும் நிர்மா என்கிற பிராண்ட் பெயர் வைத்தார். தனது வியாபார எல்லையை குஜராத்துக்கு வெளியிலும் விரிவாக்கினார். 'வாஷிங் பவுடர் நிர்மா! வாஷிங் பவுடர் நிர்மா!'' என்கிற விளம்பரப் பாடல் இந்தியாவின் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்க ஆரம்பித்தது. நிர்மாவின் வியாபாரமும் சூடுபிடித்தது. அரசு ஊழியராக வாழ்க்கை முழுவதும் இருந்திருக்கவேண்டிய கர்சன்பாய் படேல், இன்று மிகப் பெரிய ஒரு வியாபார சாம்ராஜ்ஜியத்தின் அதிபதியாக மாறியிருக் கிறார். அவரது நிறுவனத்தின் ஆண்டு டேர்னோவர் சுமார் 3,500 கோடி ரூபாய்!
'சார், கர்சன்பாய் படேல் ஒரு குஜராத்தி. தொழில் செய்வது அவரது ரத்தத்தில் இருக்கலாம். தமிழகத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு தொழில் செய்வது சரிப்பட்டு வருமா?'' என்று நீங்கள் கேட்கலாம்.
குஜராத்தில் ஊஞ்சா என்ற ஒரு ஊர் இருக்கிறது. இங்கு திரும்பிய பக்கமெல்லாம் தமிழ் பேசுகிறவர்கள்தான். 150 ஆண்டுகளுக்கு முன்பே அங்கு சென்று வியாபாரம் செய்து வருகிறார்கள். குஜராத்திகள் தங்களைவிட தொழில் திறமை கொண்டவர்களாக மதிப்பதும் தொழில் உறவுகொள்ள நினைப்பதும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களிடம்தான்.
இனி ஒவ்வொரு வாரமும் இரண்டு ஆத்திசூடிகளை உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன்!