Monday 22 July 2013

மாதந்தோறும் ரூ. 10,000 சம்பாதிக்க வேண்டுமா?

மாதந்தோறும் ரூ. 10,000 சம்பாதிக்க வேண்டுமா?

தொழில்
மாதந்தோறும் ரூ.10,000 சம்பாதிக்க வேண்டுமா?
ந ல்ல விஷயம் ஒன்றைக் கண்டு பிடித்திருக்கிறார் முருகானந்தம். இவரது கண்டுபிடிப்பு, கிராமத்து மக்கள் பலருக்கும் நிரந்தர வருமானம் ஈட்ட வழிகாட்டுவதாக இருக்கிறது. மிக சாதாரணமானவர்கள்கூட சுளையாக மாதம் 10,000 ரூபாய் வருமானம் பார்க் கும் அற்புத வாய்ப்பாக இருக்கிறது.
‘‘ஒருநாள் காலையிலே வீட்ல பேப்பர் படிச்சிட்டிருந்தேன். அப்போ, என் மனைவி மறைச்சு, மறைச்சு ஒரு துணியை எடுத்துட்டு கொல்லைப் பக்கமா போறதைப் பார்த்தேன். பின்னாடியே போய் பார்த்தா, அந்த ஈரத் துணியை ஜன்னலோரமா யார் கண்லயும் படாத இடத்திலே காயப்போடறது தெரிஞ்சது. வெயிலே வராத அந்த இடத்திலே இருந்த காயாத இன்னொரு துணியை அங்கே இருந்து எடுத்துட்டு திரும்பினவங்க, நான் பார்க்கிறது தெரிஞ்சு முறைச்சுட்டு, ‘இதெல்லாம் பொம்பளைங்க சமாசாரம்! இதைக்கூட கவனிப்பீங்களா..?’னு கோபிச்சுக்கிட்டாங்க.
‘எது ஆம்பளை கவனிக்கக்கூடாத விஷயம். ஈரமான, சுகாதாரமில்லாத துணியை வெச்சு, அவங்களுக்கு உடம்புக்கு ஏதாவது பிரச்னை வர்றதையா..?’ அந்த விஷயத்தை சுலபமா விட்டுடலை நான். எங்களை மாதிரி மிடில் கிளாஸ் ஆட்களுக்கும் ‘நாப்கின்’ங்கிற விஷயம் போய்ச் சேரணும்னு யோசிச்சேன். கோடிகள் புரள்கிற இன்டர்நேஷனல் நிறுவனங்கள் மட்டுமே நாப்கின் தயாரிக்கிறதாலதான் விலை ஏழைகளுக்கு எட்டாத உயரத்திலேயே இருக்குது. இதை மாத்திக் காட்டணும்னு முடிவு செய்ததுதான் இன்னிக்கு மலிவுவிலை நாப்கின்களைத் தயாரிக்கிற மெஷினைக் கண்டுபிடிச்சதுக்கு அடிப்படைக் காரணம்!’’ என்று தன் மெஷினில் தயாரான நாப்கின் பேட்களை காட்டினார் கோவை பாப்பநாயக்கன் புதூரைச் சேர்ந்த முருகானந்தம்.
அடிப்படையில் நெசவுக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், சிறுவயது முதலே குடும்பப் பொறுப்பைச் சுமக்க வேண்டி இருந்ததாம். ஐ.டி.ஐ படித்ததாலோ என்னவோ, எதையாவது ஆராய்ச்சி செய்து புதிதாக சில விஷயங்களை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வம் அவரது ரத்தத்திலேயே இருந்திருக்கிறது. எல்.எம்.டபிள்யூ, பி.பீ.ஓ நிறுவனம் போன்ற சில இடங்களில் பணியாற்றிய இவர், நாப்கின் ஆராய்ச்சி என்று இறங்க... குடும்பத்தில் கடும் எதிர்ப்பு. ஏதோ ஒரு வேகம், தளரவில்லை இவர். கம்ப்யூட்டர் கையாளத் தெரிந்ததால், பங்குத் தரகர் அலுவலகம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டு அதில் வருகிற வருமானத்தை வைத்து தன் ஆய்வைத் தொடர்ந்திருக்கிறார்.
‘‘இந்தியாவில் இரண்டு நிறுவனங்கள்தான் சானிட்டரி நாப்கினில் பெரிய தயாரிப்பாளர்கள். இந்த இரு நிறுவனங்களும் கிட்டத்தட்ட 85% மார்க்கெட் ஷேரைத் தங்கள் வசம் வைத்திருக்கின்றன. சுமார் 60 பிராண்ட்களில் நாப்கின்களை அறிமுகம் செய்து போட்டியாளர்களே உள்ளே நுழைய முடியாதபடி ஆக்கிரமித்திருக்கிறார்கள். அவர்களது தயாரிப்பில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்க்க, ஒரு நாப்கினை வாங்கி சென்னை ஐ.ஐ.டி-யில் ஆராய்ந்து தரக் கோரினேன். 4,000 ரூபாய் செலவில் கிடைத்த அந்த ரிப்போர்ட்டில் உள்ளே இருப்பது மரத்தூளில் இருந்து உருவாகும் பஞ்சு போன்ற ஒருவகை பொருள் என்று தெரிந்தது. நாப்கினில் இருக்கிற எல்லாப் பொருட்களுமே வெளிநாட்டுத் தயாரிப்புகள் என்றாலும், இங்கும் உற்பத்தி செய்ய சாத்தியம் உள்ளவைதான்.
இது ஒரு பக்கமிருக்க... தமிழகம் முழுக்க சிறிய அளவில் தயாராகும் நாப்கின் பேட்களை வாங்க ஒரு டூர் அடித்தேன். அவர்கள் சுத்தம் செய்யப்படாத பஞ்சுகளை சதுரமாக நறுக்கி காட்டன்துணி பேக்கிங்கில் தருவது புரிந்தது. அது அத்தனை சுகாதாரமானதாக இல்லை.
மாதவிலக்கு ஏற்பட்ட சுவடு தெரியாத உணர்வைத் தருவதால் தான் பெண்கள், உயர்தர நாப்கினின் விலையையும் பொருட்படுத்தாமல் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். அதோடு, ‘பாலி எத்திலீன் பேரியர் ஃபிலிம்’ என்று ஒரு சிறப்பு பேப்பரைப் பயன்படுத்துவதால், பெண்கள் சிரமம் இல்லாமல் பயன்படுத்த முடிகிறது.
இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு, தொடர் சோதனைகளுக்குப் பிறகு நானே ஒரு இயந்திரத்தை வடிவமைத்தேன். இதன்மூலம் சராசரியாக அரை நிமிடத்துக்கு ஒன்று என்ற கணக்கில் ஒரு நாளைக்கு சுமார் 1,000 நாப்கின்கள் வரை தயாரிக்க முடியும்.
இதை ஆராய்ச்சி செய்ய நான் பயன்படுத்தியது, எங்கள் உறவினர்களையும் சுற்றுப்புறத்துப் பெண்களையும்தான். ஆரம்பத்தில் எதிர்ப்பு காட்டிய என் மனைவி, தொழிலில் நான் காட்டிய அக்கறையைக் கண்டதும் என்னுடன் கைகோத்து உழைக்க ஆரம்பித்தார். இருவருமாக எங்கள் தயாரிப்புகளைப் பெண்களுக்குக் கொடுத்து அதன் வசதிகள் பற்றி விசாரிப்போம். துவக்கத்தில் என் நோக்கத்தையே சந்தேகப்பட்ட நண்பர்களும் இருந்தார்கள். பெண்களின் அந்தரங்கத் தகவல் கேட்பதில் சுவாரஸ்யம் காணும் சைக்கோ என்றெல்லாம் பேசி னார்கள். ஆனால், நான் எதற்கும் கலங்கவில்லை.
மற்ற பேட்களில் மையப்பகுதியில் மட்டும் கம் பேஸ்ட் இருப்பதால் சில சமயங்களில் நழுவி, நகர்கிறது என்று சிலர் தெரிவித்தார்கள். இதற்காக இரட்டை பேஸ்ட் சிஸ்டத்தைக் கொண்டு வந்தேன். என் தயாரிப்பு முழுமை அடைந்தபின் இதை டான்ஸ்டியா (ஜிகிழிஷிஜிமிகி) ஆய்வுக்கு அனுப்பினேன். பலரது கண்டுபிடிப்புகளோடு போட்டியிட்டதில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது. இது பெருமளவு கிராம மக்களுக்குப் பயன்படும் என்பதுதான் போட்டி நடுவர்கள் என் கண்டுபிடிப்பை அங்கீகரித்ததற்குக் காரணம்.
மார்க்கெட்டில் இப்போது நாப்கின் விலை கூடுதலாக இருப்பதற்குக் காரணம், அதன் தயாரிப்பு இயந்திரத்தின் விலை இரண்டே முக்கால் கோடி ரூபாய் என்பதுதான். ஆனால், நான் கண்டுபிடித்த இயந்திரத்தை வெறும் 47,000 ரூபாய்க்கே தரமுடியும். இதனால், 5 பேட்கள் 12.50 ரூபாய்க்கே தரமுடியும். இதற்கான தயாரிப்பு செலவு என்று பார்த்தால் ஐந்து ரூபாய் மட்டும்தான். இதற்குமேலே ஊழியர் சம்பளம், நமக்கான லாபம் எல்லாம் சேரும்போது பத்து ரூபாய் வந்தாலே மாதம் பத்தாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.
நான் இயந்திரத்துடன் முதல் ஒரு மாதத்துக்குத் தேவையான மூலப் பொருளையும் தரத்தயாராக இருக்கிறேன். இதற்கு கடை, ஊழியர், மின்செலவு உள்ளிட்ட பல்வகை செலவுகளையும் சேர்த்து மொத்தம் ரூபாய் 85,000 செலவாகும். மத்திய அரசு முழுவதும் கடன் தருகிறது. 35% வரை மானியமும் தருகிறது. பெண்களுக்கு முன்னுரிமை தந்து வழங்கப்படும் இந்தக் கடன்கள் கிராமத்துப் பெண்களுக்கு மிகவும் பயன்படும். சுய உதவிக் குழுவினர் போன்றோர் இந்தக் கடன் பெற்று நாப்கின் தயாரித்தால், அவர்களது கிராமத்தினரிடமே நேரடியாகவே விற்பனை செய்ய முடியும். இது தொடர் பயன்பாடு கொண்டது என்பதால், ஒருமுறை வாங்கிய வாடிக்கையாளரை அடுத்தடுத்த மாதங்களிலும் வாங்க வைக்க முடியும். இப்படியாக மாதம் குறைந்தது பத்தாயிரம் ரூபாய்க்கு குறையாமல் ஒரு மெஷின் சம்பாதித்துத் தரும்.
இதில் வேலை வாய்ப்புகளும் பெருகும். தேவையற்ற மருத்துவச் செலவுகளும் குறையும். இது எளிமையான இயந்திரம் என்பதால், பழுதாக வாய்ப்பில்லை. அப்படியே இருந்தாலும் எளிதாக நாமே சரிசெய்துவிட முடியும்’’ என்று தன் கண்டுபிடிப்பால் விளைகிற நன்மைகளையும் அடுக்கிக்கொண்டே போகிறார் முருகானந்தம்.
தொடக்கத்தில் ஒரு மாதத்துக்குத் தேவையான மூலப் பொருளைக் கொடுப்பதோடு, அதை எங்கே வாங்குவது என்ற விவரத்தையும் சொல்லித்தந்து விடுவாராம். இதனால், ‘அடுத்தடுத்த தேவைகளுக்கு நேரடியாக வாங்கிக் கொண்டு அதிலும் லாபம் பார்க்க முடியும்’ என்கிறார்.
‘‘கடைகளுக்கும்கூட சப்ளை செய்ய முடியும். தரமாக அதேசமயம் விலை குறைவாக இருக்கிறது என்கிறபோது மக்கள் இயல்பாகவே இந்த நாப்கின்கள் பக்கம் ஆர்வம் காட்டுவார்கள். தமிழகம் முழுக்க இந்த இயந்திரத்தை அறிமுகம் செய்தபின், ஒரு பொதுவான பெயரில் - ‘கோவை நாப்கின்’ என்பதுபோல - அனைவரையும் தயாரிக்கச் சொல்லி பிராண்ட் செய்யும் யோசனையும் இருக்கிறது. சுதேசி தயாரிப்பு என்பது மக்களுக்குப் புரிய வேண்டுமல்லவா..? உலகத் தரத்தில் குடிசைத் தொழில் போல இதைச் செய்து அனைவரும் வருமானம் பார்க்கவேண்டும் என்பதே என் ஆசை!’’ என்கிறார் முருகானந்தம்.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அவர் கடந்த வந்த பாதையின் முட்கள்கூட அவரை நெகிழ்ச்சியாகப் பார்க்கின்றன.

9 comments:

  1. Sir I am interested this business please give me contact number and address please
    my contact srsbcom@gmail.com, 7601831843

    ReplyDelete
  2. Sir I am interested this business. Please give your contact number and address. My mail I'd sikkandar5252@gmail.com

    ReplyDelete
  3. sir i am interested this buisiness pls contact number

    ReplyDelete
  4. sir i m intrested in bussiness but no money please u also give me help my family safly running my contect no-9952183175

    ReplyDelete
  5. sir i am interested this buisiness pls contact number

    ReplyDelete
  6. Sir I am interested this business please give me contact number and address please glomoinc@gmail.com 9003650160

    ReplyDelete
  7. Sir iam poor women help me sir. 8098566323

    ReplyDelete
  8. I am ibrahim 7339608920
    Ple u r moile numbet

    ReplyDelete