Thursday 1 January 2015

Import Export Business Details in tamil

Import Export Business Details in tamil - ஏற்றுமதி இறக்குமதி செய்வது எப்படி - 1

எஸ்.எம்.இ.கள் தயாரிக்கும் பொருட்களை உள்ளூரில்தான் விற்றாக வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. எந்தப் பொருளாக இருந்தாலும் அதை தரமாக தயார் செய்தால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, பெரிய அளவில் லாபம் பார்க்கலாம். உள்ளூரில் தங்கள் தயாரிப்பை கனஜோராக விற்பனை செய்கிற எஸ்.எம்.இ.கள், இனி அடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் கவனம் செலுத்த இதுவே சரியான நேரம். வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய என்ன செய்ய வேண்டும்? அதனால் என்ன பயன், அதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பது குறித்து இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பின் (Federation of Indian Export Organisations) துணை இயக்குநர் கே.உன்னிகிருஷ்ணனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

ஏற்றுமதியில் 45% பங்களிப்பு எஸ்.எம்.இ.கள் மூலமே கிடைக்கிறது. நாட்டின் ஏற்றுமதியில் பெரும்பான்மை சதவிகிதத்தை எஸ்.எம்.இ.கள் கொண்டுள்ளதால் அவர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஏற்றுமதியில் நல்ல லாபம் கிடைக்கும் என்பதாலும், வெளிநாட்டு ஏற்றுமதிக்கு நல்ல வரவேற்பு உள்ளதாலும் எஸ்.எம்.இ.கள் ஏற்றுமதியில் கவனம் செலுத்துவது அவசியம். ஏற்றுமதியாளர் களிடம் அவர்களது பொருளை வாங்குபவர்கள் அதிகம் எதிர்பார்ப்பது சரியான தரமும், குறித்த நேரத்தில் குறித்த அளவில் பொருளை தயார் செய்துதர வேண்டும் என்பதையுமே.  இதனை சரியாகச் செய்தாலேபோதும், தொடர்ந்து ஆர்டர்களைப் பெற்று, நல்ல லாபம் பார்க்க முடியும்.
எஸ்.எம்.இ.கள் ஏற்றுமதியில் ஈடுபடுவதற்கு முதலில் அரசாங்கத்திடம் தங்கள் நிறுவனத்தை பதிவு செய்ய  வேண்டும். இதற்கு ஏற்றுமதி ஊக்குவிப்பு கழகத்தில் (Export Promotion Council) தங்கள் நிறுவனத்தைப் பதிவு செய்து ஏற்றுமதி, இறக்குமதிக்கான குறியீட்டை பெற வேண்டும். மேலும், ஃபியோ போன்ற அமைப்புகள் ஏற்றுமதியாளர்களுக்கான விழிப்பு உணர்வு கூட்டங்களை நடத்துகிறது. அதில் கலந்துகொண்டும் பயன் பெறலாம்.
சிலர் எங்களிடம், 'நான் நன்றாகத் தொழில் செய்கிறேன். நான் எப்படி ஏற்றுமதி செய்வது?’ என்று கேட்பார்கள். நாங்கள் நடத்தும் விழிப்பு உணர்வு கூட்டங்களில் பங்கு பெறுவதன் மூலம், உள்ளூர் மார்க்கெட்டை மட்டுமே புரிந்து வைத்திருப்பவர்களுக்கு  வெளியூர் மார்க்கெட் பற்றியும் புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
ஏற்றுமதி செய்யும்போது உங்கள் முழுக் கவனமும் தரத்தில் இருக்க வேண்டும். காரணம், நீங்கள் தயாரிக்கும் பொருளில் சிறு குறை ஏற்பட்டாலும் உங்களுக்கு ஏற்றுமதி ஆர்டர் தந்த நிறுவனம் அந்தப்  பொருளை வாங்காமல் போவதற்கு வாய்ப்புண்டு. நீங்கள் வாங்கும் மூலப்பொருட்கள் தரமானதா, உங்கள் தயாரிப்பு முறையில் ஏதாவது சிக்கல் உள்ளதா என்பதில் தொடங்கி, பொருட்கள் கெட்டுப்போகாத வகையில் பேக்கேஜ் செய்யப்படுகிறதா என்பது வரை அனைத்தையுமே கவனிக்க வேண்டும்.
ஏற்றுமதி ஆர்டர் தரும் வெளிநாட்டு நிறுவனங்கள் நமது எஸ்.எம்.இ.களிடம் சில விஷயங்களில் அதிருப்தி அடைகின்றன. உதாரணமாக, 'எங்களால் அதிக பொருளை தயாரித்துத் தரமுடியும்’ என்று கூறிவிட்டு, அந்த அளவு பொருளை தயாரித்துத் தரமுடியாத நிலை ஏற்படும்போது, ஆர்டர் தந்த வெளிநாட்டு நிறுவனங்கள் அதிருப்தி அடைகின்றன. அல்லது சரியான தரத்தில் பொருளைத் தயார் செய்து தரமுடியாத நிலை ஏற்படும்போதும் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிருப்தி அடைகின்றன. ஆரம்பத்தில் நல்ல தரத்தில் பொருட்களைத் தயார் செய்து தந்துவிட்டு பின்னர் அந்தத் தரத்தை தொடர முடியாதபோதும் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிருப்தி அடைகின்றன.  வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும்போது, இந்தக் குறைகள் சிறிதும் இல்லாமல் இருப்பது தொடர்ந்து ஆர்டர்களை பெற உதவும்.  
ஏற்றுமதி செய்பவர்கள் கவனிக்க வேண்டியவை:
1. எந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்போகிறீர்களோ, அந்த நாட்டின் மார்க்கெட்டை நன்கு ஆராய வேண்டும். அங்கு என்னென்ன பொருட்கள் அதிகம் விற்கும், எவ்வளவு விற்கும் என்பது போன்ற தகவல்களை அறிந்துகொள்வது அவசியம்.
2. மூலப்பொருட்களை ஒரே இடத்தில் வாங்குவது அவசியம். அப்போதுதான் அவர்களால் ஒரே மாதிரியான தரத்தில் பொருட்களை தயாரிக்க முடியும்; சரியான நேரத்தில் டெலிவரி தரவும் முடியும்.
3. பொருட்களை தொலைதூரத்துக்கு அனுப்புவதால் பேக்கேஜிங்கில் நல்ல தொழில்நுட்பத்தையும், அதற்கேற்றவாறு பாதுகாப்பான பேக்கிங் முறைகளையும் பின்பற்றுவது அவசியம். ஏற்றுமதியாகும்  பொருட்கள் தட்பவெட்ப நிலையால் பாதிப்படையாதபடி பேக்கிங் செய்வது அவசியம்.
4. வெளிநாட்டுக்கு நீங்கள் அனுப்பும் பொருளை இன்ஷூரன்ஸ் செய்வது அவசியம். அப்போதுதான், அனுப்பப்படும் பொருள் இடையில் சேதமானாலோ அல்லது திடீர் போர் காரணமாக பாதிப்படைந்தாலோ அதற்கான இழப்பீட்டை பெற முடியும்.
5. ஏற்றுமதி செய்யப்படும் பொருட் களுக்கு பலவிதமான விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் உண்டு. இது நாட்டுக்கு நாடு மாறுபடும். இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் இந்தப் பொருட்கள்  தயாரிக்கப்பட்டுள்ளன என அந்த நாடு சான்றிதழ் அளிக்கும். ஏற்றுமதி செய்வதற்கு இந்தச் சான்றிதழ் பெறுவது அவசியம்.
இவை தவிர, இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பும் ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் திட்டங்களை உருவாக்கி யுள்ளது. இதன் முக்கிய நோக்கமே, இந்திய தயாரிப்புகளை மற்ற நாடுகளில் பிரபலப்படுத்துவதுதான். மேலும், உலகின் பல நாடுகளில் எங்கெங்கு, என்னென்ன பொருட்கள் தேவைப் படுகின்றன, அதனை யார், யார் தயாரிக்கிறார்கள் என்கிற தகவல்களை எஸ்.எம்.இ.களுக்கு எடுத்துச் சொல்கிறது'' என்றார்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது பணத்தை பாதுகாப்பாக பெறுவதற்கான வழிமுறைகளைப் பற்றியும் ஏற்றுமதி செய்பவர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் சலுகைகளைப் பற்றியும் அடுத்த வாரம் பார்ப்போம்.