Thursday 1 October 2015

Maadu Valarppu | Paal Pannai | மாடு வளர்ப்பு | பால் பண்ணை | Dairy | Cow Farm in Tamilnadu

Maadu Valarppu  | Paal Pannai | மாடு வளர்ப்பு | பால் பண்ணை | Dairy | |Cow Farm in Tamilnadu | Tamil 

How to Start Dairy Farm in Tamilnadu

22 மாடுகள்... மாதம் ஒரு லட்சம்! பழுதில்லாமல் லாபம் கொடுக்கும் பால் பண்ணை!

ரம்பரையாக மாடு வளர்ப்பவர்களே பால் பண்ணையில் போதிய வருமானம் இல்லை என வேறு தொழில்களை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில்... “சரியாகத் திட்டமிட்டு செய்தால் பசுக்களில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களையும் விற்பனை செய்து நல்ல லாபம் எடுக்க முடியும்” என்று விரல் உயர்த்துகிறார், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகிலுள்ள தம்மனூர் கிராமத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத்.
பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்த ஹரிபிரசாத்தைச் சந்தித்து நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.
‘‘நான் சென்னை, பல்லாவரத்துல குடியிருக்கேன். பால் பண்ணை வைக்கணுங்கிற ஆர்வத்துல ஒரு  மணி நேர பயண தூரத்துல இருக்கிற மாதிரி நிலம் தேடுனேன். அப்படி 2001-ம் வருஷம் கிடைச்சதுதான் இந்த நிலம். எங்க வீட்டுல இருந்து 50 கிலோ மீட்டர் தூரம்தான். மொத்தம் மூணே முக்கால் ஏக்கர். பக்கத்துலேயே ரெண்டே கால் ஏக்கர் நிலத்தை குத்தகைக்குப் பிடிச்சிருக்கேன். மொத்தம் ஆறு ஏக்கர். இதுல, நாலு ஏக்கர்ல மாடுகளுக்குத் தேவையான கோ-3, கோ-4, சவுண்டல், அகத்தி மாதிரியான பசுந்தீவனங்களைப் போட்டிருக்கேன். ஒண்ணே கால் ஏக்கர்ல ஏ.டி.டீ-43 நெல் இருக்கு. மீதி இடங்கள்ல கிணறு, மாட்டுக் கொட்டகை, பாதை எல்லாம் இருக்கு.
பயிற்சிக்குப் பிறகு பண்ணை!
பால் பண்ணை வைக்கணும்னு முடிவு பண்ணிட்டதால ‘கே.வி.கே’வில் மாடு, கோழி வளர்ப்பு தொடர்பான பயிற்சிகளை எடுத்துக்கிட்டு... ஆரம்பத்துல ஆறு கலப்பின மாடுகளை வாங்கினேன். அவை மூலமா, தினமும் 20 லிட்டர் வரை பால் கிடைச்சது. தனியார் பால் பண்ணைக்குத்தான் பால் கொடுத்துக்கிட்டிருந்தேன். அதோட, இயற்கை முறையில பசுந்தீவனங்கள், காய்கறி, சோளம், சாமை, தினைனு சாகுபடியும் செய்துட்டு இருந்தேன். சிறுதானியங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால விற்பனைக்கு பிரச்னையில்லை. ஒரு கட்டத்துல சிறுதானிய விவசாயத்துல கவனம் போனதால மாடுகளை சரியா கவனிக்க முடியாமப் போயிடுச்சு. ஆனா, இப்போ மறுபடியும் பால் உற்பத்தியில முழுகவனத்தையும் திசை திருப்பியிருக்கேன்.
கைகொடுத்த வங்கிக்கடன்!
பால் விற்பனைனு மட்டும் நின்னுடாம மதிப்புக் கூட்டல் செய்து கூடுதல் லாபம் பாக்கணும்னு முடிவு பண்ணி... வங்கியில 35 லட்ச ரூபாய் கடன் வாங்கி, பால் பண்ணையை விரிவுபடுத்தினேன். கிணறு வெட்டி, நிலத்தைச் சரிபடுத்தினேன். அதோட, தார்பார்க்கர், சாஹிவால், சிந்தினு நாட்டு மாடுகளையும், பால் மதிப்புக் கூட்டல் இயந்திரங்களையும் வாங்கினேன். இப்போ மொத்தம் 22 மாடுகள் இருக்கு. பால் பண்ணை ஆரம்பிச்சு ஒரு வருஷம் முடியப் போகுது. இப்ப, தினமும் 150 லிட்டர்ல இருந்து
180 லிட்டர் வரை பால் கிடைக்குது.
இயற்கைப்பாலுக்கு கூடுதல் ருசி!
இயற்கை விவசாயத்தில் விளைந்த தீவனங்களை மட்டுமே சாப்பிடுற நாட்டு மாடுகளோட பால்ங்கிறதால, என் பண்ணை பால் நல்ல திக்கா, ருசியா இருக்கும். இந்த பாலுக்கு பிராண்ட் பெயர் பதிவு செஞ்சு, சிறுதொழிலுக்கான சான்றையும் வாங்கி பாக்கெட்ல அடைச்சு சென்னையில இருக்கிற பசுமை அங்காடிகளுக்குக் கொடுக்கிறேன். நல்ல வரவேற்பு இருக்கு. மீதமுள்ள பால்ல ஆர்டரைப் பொறுத்து பனீர், வெண்ணெய், நெய் தயாரிச்சு விற்பனை செய்றேன். அப்படியும் பால் மீதமானா தனியார் பண்ணைகளுக்கு ஊத்திடுவேன்” என்ற ஹரிபிரசாத், மதிப்புக் கூட்டுப் பொருட்கள் தயாரிப்புப் பற்றிச் சொன்னார்.
அட்சயப் பாத்திரம்!
“பால் பண்ணை வெக்கிறவங்க, பாலை மட்டும்தான் பணமா பாக்குறாங்க. அதனாலதான் சிலசமயங்கள்ல நஷ்டம் வந்துடுது. ஆனா, பசு ஒரு அட்சயப் பாத்திரம் மாதிரி. அது கொடுக்குற அத்தனையும் மதிப்புமிக்கது. அதை நான் சரியா புரிஞ்சுக்கிட்டதால எதையுமே வீணாக்கிறதில்லை. சாணம், சிறுநீரை விற்பனை செய்றேன். பஞ்சகவ்யா தயாரிச்சு விற்பனை செய்றேன். யாகத்துக்கான வறட்டி தயார் பண்ணி விற்பனை செய்றேன். தார்பார்க்கர் மாட்டுச்சாண வறட்டி யாகத்துக்கு நல்லதுங்கிறதால எப்பவும் ஆர்டர் இருந்துகிட்டே இருக்கு. ஒரு லிட்டர் சிறுநீரை எட்டு ரூபாய்னும், ஒரு வறட்டியை மூணு ரூபாய்னும் விற்பனை செய்றேன்.
‘இப்ப என்கிட்ட மொத்தம் 22 மாடுகள் இருக்கு. இதன் மூலமா மாசத்துக்கு சராசரியா 5 ஆயிரம் லிட்டர் பால் கிடைக்குது. இதுல, பசுமை அங்காடிக்கு லிட்டர் 55 ரூபாய் விலையில தினமும் 50 லிட்டர் கொடுக்கிறேன். மாசத்துக்கு 82 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் கிடைக்குது. நெய், பனீர், வெண்ணெய் விற்பனை மூலமா சராசரியா மாசத்துக்கு 75 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. தனியார் பண்ணைக்குக் கொடுக்கிற பால் மூலமா மாசத்துக்கு 34 ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்குது. சிறுநீர், சாணம், பஞ்சகவ்யா, வறட்டி, கோழி  முட்டை, வாத்து முட்டை விற்பனை மூலமா மாசத்துக்கு சராசரியா 33 ஆயிரம் ரூபாய் வருது. ஆக மொத்தம் மாசம் 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வருமானம். இதுல, 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவு போக, ஒரு லட்ச ரூபாய் லாபமா நிக்குது. அதுல, கடனுக்கான தவணைத் தொகையா மாசம் 80 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டியிருக்கு. மீதி 20 ஆயிரம் ரூபாய் கையில நிக்குது. வங்கிக் கடனை அடைச்சப் பிறகு, மாசம் ஒரு லட்சம் சொளையா கைக்கு கிடைக்கும்’’ என்ற ஹரிபிரசாத், மாடுகளுக்கான நோய் மேலாண்மை பற்றியும் பேசினார்.




ஆடு மாடுகளை வளர்ப்பது என்பது ஆதிகாலத்திலிருந்து மனித சமுதாயத்துக்குப் பயனளிக்கும் ஒன்றாகவே கருதப்பட்டு வருகிறது. எத்தனையோ விவசாயக் குடும்பங்களுக்கு ஆடு மாடுகள்தான் சோறு போடுகின்றன. இன்று பல குழந்தைகள், ஏன் பெரியவர்கள்கூட பசுவின் பால் குடித்துதான் வளர்கிறார்கள்; வாழ்கிறார்கள். விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்கள் புகுந்துவிட்டாலும், விவசாயத் தொழில்களுக்கு ஆடு மாடுகள் ஏராளமாக உதவி புரிகின்றன. மாடுகள் தங்கள் உழைப்பைத் தருவதோடு இறைச்சி, பால், சாணம், கோமியம், கொம்பு, தோல் என அனைத்தையும் தந்து உதவுகின்றன. ஆடு வளர்ப்பிலும் அதேபோலதான். ஆட்டின் இறைச்சி, தோல், பால், புழுக்கை என அனைத்தும் பணமாகிறது. கறவை மாடுகள், உழவு மாடுகள், எருமை மாடுகள், காளை மாடுகள் போன்ற மாட்டு இனங்களை வளர்க்கவும், அவற்றுக்குத் தேவையான புல் வகைகள், தீவனங்கள், பராமரிப்பு... என விளக்கங்களைத் தருவதோடு, மாடுகளை வாங்கவும் விற்கவும் சந்தைகள், வங்கிக்கடன், லாபகணக்குகள் என அத்தனை விவரங்களையும் தருகிறது இந்த நூல்.


தீவனத்தோடு மருந்து!
“மாடுகளுக்கு கோமாரி, சப்பை நோய்னு சீசனுக்கு தகுந்தாப்புல நோய்கள் வரும். அந்தந்த சீசனுக்குத் தகுந்த மாதிரி நோய் வர்றதுக்கு முன்னாடியே தடுப்பூசி போட்டுட்டா நோய்த்தாக்குதலைத் தவிர்த்துடலாம். அதுபோக, மடிவீக்க நோய்தான் பெரும் பிரச்னை. அது எப்ப வரும்னே தெரியாது. அதுக்கு மருத்துவர்கள் ஆலோசனை கண்டிப்பா அவசியம். நாங்க பெரும்பாலும் கால்நடை மருத்துவர் புண்ணியமூர்த்தி கிட்டத்தான் ஆலோசனை கேட்டுக்குவோம். அது போக, எங்க மாடுகளுக்கு... வாரத்துல ஒரு நாள் தீவனத்தோட வேப்பிலை; ஒரு நாளைக்கு பூண்டு; ஒரு நாளைக்கு மஞ்சள்னு கொடுத்துடுவோம். அதுனால பெருசா நோய் தொந்தரவு இல்லாம ஆரோக்கியமா இருக்கு.
பண்ணையில இருக்கிற வாத்துகள் மாட்டு ஈ, உண்ணிகளையெல்லாம் பிடிச்சு தின்னுடுது. அதனால பாதி பிரச்னை சரியாகிடுது. பொதுவா, மாடுகளை தினமும் குளிப்பாட்டணும். ஒவ்வொரு மாட்டையும் தனித்தனியா கவனமா பார்க்கணும். சில மாடுக தீவனம் எடுக்காம இருக்கும். சில மாடுக சோர்வா இருக்கும். அந்த மாடுகளுக்கு என்ன பிரச்னைனு பாத்து அதை சரி செய்யணும். ஆகமொத்தம் முறையா செய்தால் பால் பண்ணை நிச்சயமா லாபம் கொழிக்கும் தொழில்ங்கிறதுல சந்தேகமேயில்லை” என்று நம்பிக்கையூட்டும் விதமாகச் சொல்லி விடைகொடுத்தார் ஹரிபிரசாத்.

வெண்ணெய்க்கு தார்பார்க்கர்!
வெண்ணெய் எடுக்க தார்பார்க்கர் மாட்டுப்பாலை மட்டுமே பயன்படுத்தும் ஹரிபிரசாத், ‘‘பழைய கால முறைப்படி பானையில வெச்சு கடைஞ்சி வெண்ணெய் எடுக்கிறேன். 25 லிட்டர் பாலுக்கு 5 கிலோ வெண்ணெய் கிடைக்கும். ஒரு கிலோ வெண்ணெய் 700 ரூபாய் வரைக்கும் விற்பனையாகுது. 5 கிலோவுக்கு 3,500 ரூபாய் கிடைக்கும். விசேஷ நாட்கள்ல வெண்ணெய் ஆர்டர் அதிகமாக வரும்’’ என்கிறார்.
பலே பனீர்!
மதிப்புக் கூட்டுப் பொருட்கள் செய்வதற்கு முறையாகப் பயிற்சி எடுத்திருக்கும் ஹரிபிரசாத், ‘‘பனீர் தயாரிக்க அதிகம் மெனக்கெடத் தேவையில்லை. பால்ல எலுமிச்சைச்சாறை விட்டா, கால் மணி நேரத்துல பால் புளிச்சுடும். 5 லிட்டர் பாலுக்கு, ஒரு எலுமிச்சைப் பழத்தைப் பிழிஞ்சு விடலாம். புளிச்சு கெட்டியான பாலை, வடிகட்டி பனீர் தயாரிக்கிற கருவியில போட்டு இடியாப்பம் பிழியிற மாதிரி பிழிஞ்சா, தண்ணியெல்லாம் சுத்தமா வடிஞ்சு கட்டியான பனீர் கிடைக்கும். அதை அப்படியே பாக்கெட் பண்ணிக் கொடுத்திடலாம். ஒரு கிலோ பனீர் தயாரிக்க 10 லிட்டர் பால் தேவை. ஒரு கிலோ பனீர் 400 ரூபாய்க்கு விற்பனையாகுது” என்கிறார்.
கைசெலவுக்கு முட்டை!
சில ரக கோழிகளையும் வளர்க்கிறார் ஹரிபிரசாத். அவற்றைப் பற்றி பேசும்போது, ‘‘எங்க பண்ணையில 150 நாட்டுக்கோழிகள் இருக்கு. கிரிராஜா, வனராஜா ரகக் கோழிகளைத்தான் வளர்க்கிறேன்.
இதுகளுக்காக தனியா கொட்டகை கிடையாது. அப்பப்ப தீவனம் கொடுக்கிறது, தடுப்பூசிகள் போடுறதோட சரி.
காலையில கிளம்பி தோட்டம் முழுக்க மேய்ஞ்சுட்டு, சாயங்கால நேரத்துல அதுகளா அடைஞ்சுக்கும். அடைக்கு வெக்கிறது போக மீதி முட்டைகளை மட்டும் விற்பனை செய்றோம். கோழிகளை விற்பதில்லை. அதேமாதிரி வாத்துகள் மூலமா கிடைக்கிற முட்டைகளை மட்டும்தான் விற்பனை செய்றேன். இந்த முட்டை வருமானம் கைசெலவுக்கு சரியா இருக்குது’’ என்று குஷியாகச் சொல்கிறார்.

ஆடு, கோழி, மாடு, நெல், எலுமிச்சை...குடும்பத் தலைவியின் இயக்கத்தில் ஓர் ஒருங்கிணைந்த பண்ணை!
திருமணத்துக்குப் பிறகு சிறகுகளை முடக்கிக் கொண்டு குடும்பக்கூட்டுக்குள் முடங்கும் பெண்கள்தான்  ஏராளம். ஒரு சிலரே அந்தக்கூட்டுக்குள் இருந்து வெளியேறி வெற்றிக்கொடி நாட்டுவர். அப்படிப்பட்ட பெண்களில் ஒருவர்தான் வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியைச் சேர்ந்த தீபலட்சுமி. ‘விவசாயம் செய்ய வேண்டும்’ என்ற பெருங்கனவில், கணவரின் துணையோடு  நிலம் வாங்கி, ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’ அமைத்து வருமானம் பார்த்து வருகிறார், இவர்.
வேலூர்-சித்தூர் சாலையில் 10 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது, கொள்ளமடுகு கிராமம் (ஆந்திர மாநிலம்). இங்குதான் அமைந்துள்ளது, தீபலட்சுமியின் ஒருங்கிணைந்த பண்ணை. தோட்டத்தில் நுழைந்ததும், குரைப்பின் மூலமாக நமது வரவை அறிவித்தன, தீபலட்சுமியின் வளர்ப்பு நாய்கள். முற்றத்தில் மேய்ந்துகொண்டிருந்த கோழிகள், பசுந்தீவனத்தைச் சுவைத்துக்கொண்டிருந்த காசர்கோடு குட்டை மாடுகள், கொட்டிலுக்குள் உலவிக்கொண்டிருந்த ஆடுகள்... என இனிமையான சூழலில் இருந்தது, அந்தப்பண்ணை. நம்மை வரவேற்றுப் பேச ஆரம்பித்தனர், சுதாகரன் - தீபலட்சுமி தம்பதியர்.
விவசாய ஆசை கொடுத்த பசுமை விகடன்!
முதலில் பேசிய தீபலட்சுமி, “வேலூர்தான் எனக்குச் சொந்த ஊர். எம்.சி.ஏ முடிச்சிட்டு வேலூர்ல ஒரு ஹாஸ்பிடல்ல வேலை பார்த்தேன். படிப்பு, வேலை எல்லாமே நகரத்துல இருந்தாலும், எனக்கு விவசாயம், ஆடு, கோழி வளர்ப்புல ஆசை அதிகம். அதுக்குக் காரணம் கிராமத்துல இருந்த எங்க பாட்டிதான். அவங்க வீட்டுக்கு நான் அடிக்கடி போய் வந்ததால எனக்கு விவசாயம், கால்நடை வளர்ப்புனு ஆசை வந்துடுச்சு. ஆனா, எங்க வீட்டுல செடி வளர்க்க இடமில்லை. வேலைக்குப் போயிட்டு இருந்ததால நேரமும் இல்லை.
அப்புறம் கல்யாணம், குழந்தைனு ஆனதும் வேலையை விட்டுட்டேன். கணவர் வீட்டுல செடிகள் வளர்க்க இடம் இருந்ததால காய்கறிச் செடிகள், மூலிகைச் செடிகள்னு வளர்க்க ஆரம்பிச்சேன். கணவர் அசிஸ்டண்ட் புரொபசரா இருக்கார். அவர் பயோ-டெக்னாலஜி படிச்சிருக்கறதால இயற்கை பத்தி அடிக்கடி பேசுவார். அவர்தான் எனக்கு ‘பசுமை விகட’னை அறிமுகப்படுத்தினார். அதைப்படிக்க ஆரம்பிச்சதும், நிலம் வாங்கி விவசாயம் செய்யணும்ங்கிற ஆசை அதிகமாச்சு” என்றவரைத் தொடர்ந்து பேச ஆரம்பித்தார், அவருடைய கணவர் சுதாகரன்.
“எனக்கு இயற்கை மேல ஆர்வம் இருந்தாலும், விவசாயம் செய்ய நேரம் இல்லை. மனைவி ஆசைப்பட்டதும் அதை நிறைவேத்தலாம்னு முடிவு பண்ணுனேன். நிலத்தைத் தேடி அலைஞ்சப்போ எனக்கும் விவசாய ஆசை அதிகமாகிடுச்சு. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை வந்தா நிலம் பார்க்கக் கிளம்பிடுவேன். பல தேடல்களுக்குப் பிறகு இந்த மூணு ஏக்கர் நிலம் கிடைச்சது. இதை வாங்கி ஒண்ணரை வருஷமாச்சு. பசுமை விகடன் மூலமா தெரிஞ்சிக்கிட்ட விஷயங்களை அடிப்படையா வெச்சு, ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கலாம்னு முடிவு செய்தோம். 
மகிழ்ச்சி கொடுத்த நிலக்கடலை!
நிலத்தைச் சுத்தம் செய்து, 80 சென்ட் நிலத்துல முழு இயற்கை முறையில மானாவாரியா நிலக்கடலை விவசாயம் செய்தோம். அதுல 10 மூட்டை நிலக்கடலை கிடைச்சது. அதைப் பார்த்தப்ப சந்தோஷம் தாங்க முடியலை. அடுத்து போர்வெல் போட்டுட்டு நிலக்கடலை அறுவடை செய்த நிலத்துல பலதானிய விதைப்பு செய்து, மடக்கி உழுது வெச்சிருந்தோம்.
பாடம் கற்றுக் கொடுத்த நெல்!
அப்போ, ஆதிபராசக்தி வேளாண்மைக் கல்லூரியில இருந்து பயிற்சிக்காக வந்திருந்த அஞ்சு மாணவர்கள், அந்த நிலத்துல ஒற்றை நாற்று முறையில நெல் நடவு செஞ்சாங்க. அதுல பயிர் நல்லா வளர்ந்துச்சு. ஆனா, எங்களுக்கு அனுபவம் இல்லாததால சரியா பராமரிக்கல. அதனால, 80 சென்ட்ல 6 மூட்டை (80 கிலோ மூட்டை) நெல்தான் கிடைச்சது. அதை அரைச்சதுல 300 கிலோ அரிசி கிடைச்சது. 150 கிலோ அரிசியை 72 ரூபாய்னு இயற்கை அங்காடிக்கு விற்பனை செய்துட்டோம். மீதி அரிசியை, சொந்தக்காரங்களுக்குக் கொடுத்தோம்.
லாபம் கொடுத்த கீரை!
அடுத்து, கீரை சாகுபடி செய்யலாம்னு முடிவு செய்து, 10 சென்ட் நிலத்துல அரைக்கீரையையும், சிறுகீரையையும் வெதைச்சிருந்தோம். வேப்பம் பிண்ணாக்கு, மண்புழு உரம் பயன்படுத்தினதுல பூச்சித் தாக்குதல் அதிகம் இல்லாம செழிப்பான கீரை கிடைச்சது. ஒரு கட்டு 7 ரூபாய்னு, தினம் 20 கட்டுகள் வீதம் இயற்கை அங்காடியில விற்பனை செய்தோம். மொத்தம் ஆயிரம் கட்டுக்கீரை கிடைச்சது. அதுல செலவு போக 5 ஆயிரம் லாபம் கிடைச்சது” என்று சுதாகரன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவருக்கு அலைபேசி அழைப்பு வர, மேற்கொண்டு நமக்கு பண்ணையைச் சுற்றிக் காட்டி விளக்க ஆரம்பித்தார் தீபலட்சுமி.
நம்மாழ்வார் வழியில் பண்ணை வடிவமைப்பு!
“மொத்தம் மூணு ஏக்கர் நிலம். அதுல 80 சென்ட்ல எலுமிச்சை இருக்கு. 40 சென்ட்ல வேலிமசால், முயல்மசால், கோ-4, அகத்திக்கீரை, சூபாபுல்னு பலவகையான  பசுந்தீவனங்கள் இருக்கு. 23 சென்ட்ல மீன்குளம், 5 சென்ட்ல கிணறு, 20 சென்ட்ல வண்டிப்பாதை, 80 சென்ட்ல நெல், 30 சென்ட்ல சேம்பு இருக்கு. 22 சென்ட்ல வீடு, ஆட்டுப்பட்டி, மாட்டுக்கான கொட்டகை எல்லாம் இருக்கு.
நம்மாழ்வார் அய்யா சொல்லிச் சென்ற வழிமுறைகளின்படி பண்ணையை வடிவமைச்சிருக்கோம். நீண்ட நாள் வருமானம் கொடுக்கிற பயிர்ங்கிறதால எலுமிச்சை நட்டோம். 18 அடிக்கு 18 அடி இடைவெளியில 80 சென்ட் நிலத்துல மொத்தம் 100 செடிகள் இருக்கு. நடவு செய்து ஆறு மாசம் ஆகுது. இன்னும் மூணு வருஷத்துல வருமானம் கிடைக்க ஆரம்பிக்கும். 100 மரங்கள்ல இருந்து வருஷத்துக்கு ரெண்டு லட்ச ரூபாய் வருமானம் எடுக்கணுங்கிறது எங்க குறிக்கோள்.
இந்தப் பகுதியில நிறைய பேர் சேம்பு சாகுபடி செய்றதால நாங்களும் கொஞ்சம் சேம்பு நட்டிருக்கோம். இப்போ 3 மாசப்பயிரா இருக்கு. இன்னும் 3 மாசத்துல வெட்டுக்கு வந்துடும். வெட்டும்போது, 20 மூட்டை (100 கிலோ) அளவுக்குச் சேம்பு கிடைக்கும்னு எதிர்பார்க்கிறோம். அது மூலமா 40 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறோம்.
80 சென்ட் நிலத்துல இந்த முறை அறுபதாம் குறுவையையும், சீரகச் சம்பாவையும் நடவு செய்யலாம்னு இருக்கோம்.
கேரளாவில் கிடைத்த குட்டை மாடு!
பசுமை விகடன்ல ‘ஜீரோ பட்ஜெட்’ விவசாய முறைகளைப் படிச்ச பிறகு நாட்டு மாடுதான் வாங்கணும்னு முடிவு செய்துட்டேன். பலகட்ட தேடலுக்குப் பிறகு, உலக அளவுல குட்டை இன பசுவான ‘காசர்கோடு குட்டை’ ரக மாடுகளை வாங்கினோம். நாலு பெரிய மாடுகள், ஒரு கன்றுக்குட்டினு மொத்தம் அஞ்சு மாடுகள் இருக்கு. ஒரு மாடு சினையா இருக்கு. ஒண்ணரை வயசுல ரெண்டு கிடேரிகள் நிக்கிது. ஒரு மாடு மட்டும் கறவையில இருக்கு. அதுல இருந்து தினம் கன்றுக்குட்டிக்கு ஒரு லிட்டர் அளவுக்குக் குடிக்க விட்டது போக, ஒண்ணரை லிட்டர் பால் கிடைக்கிது. மாடு குட்டையா இருக்கிறதால பராமரிக்கிறது சுலபமா இருக்கு. தினம் 5 கிலோ தீவனமே போதுமானதா இருக்கு. இந்த இனத்தைக் கலப்பில்லாம பெருக்கணும்னு முடிவு பண்ணியிருக்கோம்.
ஓஹோ... ஓஸ்மானாபாடி!
இங்க நிக்கிறது மகாராஷ்டிரா மாநிலத்தை பூர்விகமாகக் கொண்ட ஓஸ்மானாபாடி ஆடுகள். நம்ம நாட்டு ரக ஆடுகளைப் போலவே கருப்பு நிறத்துல இருக்கும். ஆனா, இந்த ரகத்துல பால் அதிகமா கிட்டைக்கும். ரெண்டு கிடா, 13 பெட்டை, 3 குட்டிகள்னு மொத்தம் 18 ஆடுகள் இருக்கு. உலவுறதுக்கு இடம் விட்டு கொட்டகை அமைச்சிருக்கோம். ஒவ்வொரு ஆட்டுக்கும் தினமும் காலையிலயும் சாயங்காலமும் ஒண்ணரை கிலோ அளவுக்கு பசுந்தீவனமும், கால் கிலோ அடர்தீவனமும் கொடுக்கிறோம். இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு குட்டிகள் பெருகினதுக்கப்பறம்தான் இதுல வருமானம் கிடைக்கும். வருஷத்துக்கு 40 குட்டிகள் எடுக்கணும்னு வெச்சிருக்கோம். எங்க கணக்குப்படி சரியா கிடைச்சா ஆடு மூலமா வருஷத்துக்கு ஒண்ணரை லட்ச ரூபாய்க்கு மேல வருமானம் எடுக்க முடியும்.
செலவில்லா வருமானம் கொடுக்கும் கோழிகள்!
‘பெருவிடை’ நாட்டுக்கோழி ரகத்துல 8 பெட்டை, 2 சேவல்னு மொத்தம் 10 கோழி வெச்சிருக்கோம். இப்போ, வாரம் 25 முட்டையில இருந்து 30 முட்டைகள் வரை கிடைக்கிது. ஒரு முட்டை 8 ரூபாய்னு விற்பனை செய்றோம். கோழிகளுக்குத் தீவனத்துக்காக எந்தச் செலவும் இல்லை. மேய்ச்சல் மட்டும்தான்.
இதோட, ஒரு ஜோடி கோம்பை நாய்களை தடுப்பூசி எல்லாம் போட்டு ஊட்டமா வளர்த்துக்கிட்டிருக்கோம். அதுல இருந்து குட்டிகளை எடுத்து விற்பனை செய்யலாம்னு இருக்கோம். மீன் வளர்ப்புக்காக 10 ஆயிரம் சதுர அடியில குளம் எடுத்து வெச்சிருக்கோம். இன்னும் மீன் வளர்க்க ஆரம்பிக்கலை. அதே மாதிரி நிலத்துல அமைச்சிருக்கிற பாதையில தென்னை, கொய்யா, சப்போட்டா, நாவல், மாதுளை, மா, பலா, வாழைனு பழச்செடிகளை நடவு செய்திருக்கோம். வாழை சீக்கிரம் தார் போட்டுடும். மத்த பழங்கள் கிடைக்க மூணு வருஷம் ஆகும். எப்பவும் ஏதாவது ஒரு பழம் தோட்டத்துல காய்ச்சிட்டு இருக்குற மாதிரிதான் தேர்வு பண்ணியிருக்கோம்” என்று நிறுத்தினார் தீபலட்சுமி.
நிறைவாகப் பேசிய சுதாகரன், ‘‘தற்சமயம் பண்ணை வளர்ச்சி நிலையிலதான் இருக்கு. இப்போதைக்கு முட்டை விற்பனை, நெல், கீரை விற்பனை மூலமாகக் கிடைக்கிற வருமானம் பராமரிப்புக்கே சரியாகிடுது. இன்னும் ரெண்டு வருஷத்துல நல்ல வருமானம் கிடைக்க ஆரம்பிச்சுடும். அதுக்குப் பிறகு வருஷத்துக்கு 6 லட்சம் ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறோம். அது இல்லாம இப்போ எங்க பிள்ளைங்களுக்கு விவசாயத்தைக் கற்றுக் கொடுக்க ஆரம்பிச்சிருக்கோம்.
நகர வாழ்க்கையில இருக்கிற வெறுமையை, இந்தப் பண்ணை மூலமா போக்கிக்கிட்டோம். கூடவே வருமானத்துக்கான வழியையும் உருவாக்கிட்டோம். இதைவிட நகர வாழ்க்கையில கூடுதல் வருமானம் கிடைக்கலாம்... ஆனா, இந்த சந்தோஷம் கிடைக்குமா” என்று கேட்டு புன்னகையுடன் விடைகொடுத்தார்.

11 comments:

  1. Replies
    1. paal pannai amaika, antha antha maavata velan palgalaikalagam anugavum

      Delete
  2. sir, i need a complete guide in runni
    ng cow farm.please help me, send me the informations by email sir

    ReplyDelete
    Replies
    1. need of paaal pannai details , go through karavai maadu book in town shop

      Delete
  3. Sir we need to start what's the procedure

    ReplyDelete
  4. சுய தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில் செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு அனைத்து பயிற்சியும் உதவிகளும் செய்துதரப்படும் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்-9944209238

    ReplyDelete
  5. சுய தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில் செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு அனைத்து பயிற்சியும் உதவிகளும் செய்துதரப்படும் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்-9944209238

    ReplyDelete
    Replies
    1. Thankyou sir nan srilankala irukkan unga pathivu mulama henakku uthavi purinjathitkku

      Delete